Monday, December 29, 2008

சூ சூ மாரி!!!

கொஞ்ச நாளுக்கு முன்னாடி கலைஞர் டி.வில ஓரு பாட்டைக் கேட்டேன். சின்னப் பசங்க எல்லாம் சேர்ந்து கூத்து அடிக்கற பாட்டு தான். வெயில் படத்தோட வெயிலோடு விளையாடி, அழகி படத்துல வரும் டமக்கு டமக்கு டம் பாட்டு மாதிரியே இதுலயும் சின்ன பசங்க எல்லாம் சேர்ந்து செய்யும் அட்டகாசம் தான் highlight. எனக்கு வெயிலோடு விளையாடி பாட்டு ரொம்ப பிடிக்கும். அதுல இழையோடற ஒரு நூலிழை சோகம் தான் அந்த பாட்டை ரசிக்க வெச்சது. 
        ஆனா இந்த "சூ சூ மாரி" பாட்டுல இருக்கற அழகு அந்த குரல். எதுவுமே முக்கியம் இல்லைன்னு விட்டேத்தியான ஒரு குரல். ஆனா பாடற பாட்டோட சுவை குறையாம இருக்கறதுக்கு உதவினதே அந்த விட்டேத்தியான குரல் தான். என்ன ஆழம்!! "சூ சூ மாரி" அப்படின்னு இழுத்து பாடும்போது அப்படியே அந்த குரல் நம்மள அந்த பாட்டுக்குள்ள இழுத்துட்டுப் போவது தான் உண்மை...அந்த குட்டிய வேற ஒரு நிகழ்ச்சில பார்க்க முடிஞ்சது.அதுல கிறித்துமஸ் தாத்தா ஒரு tongue twisterஅ சொல்ல எல்லா சின்ன பசங்களும் அப்படியே நா பிறழாம சொல்லணும். இந்த பொண்ணுக்கு முறை வந்ததும் சர்வ சாதாரணமா சொல்லிட்டு ஒரு சின்ன smile வேற செஞ்சிது. அப்பறம் ஒரு பாட்டு பாட சொன்னதும் இந்த பாட்டைத் தான் பாடி காமிச்சது அந்த பொண்ணு.அப்போ தான் தெரிஞ்சது அந்தப் பாடலோட குரலுக்கு சொந்தக்காரி யாருன்னு. நா பிறழாம குரல் பிசுறாம அந்த சின்ன பொண்ணு பாடி இருக்கற அழகே தனி. பெருசா ஒண்ணும் கலக்கற music எல்லாம் கிடையாது. பெரிய காட்சி அமைப்பு எல்லாம் கிடையாது. இருந்தாலும் சின்ன சின்ன ரசிக்கக்கூடிய விஷயங்கள் அந்தப் பாட்டுல நிச்சயமா இருக்கு. அதுல ஒரு சின்னப் பையன் காமெராவப் பார்த்து பார்த்து பேசற விதம் soopero sooper. நல்ல சேட்டை. குச்சி iceஅ சாப்பிட்டுட்டே அந்த பையன் காமெராவப் பார்த்து உனக்கு வேணுமா?வேணாம்னாப் போ..! அப்படின்னு சொல்லிட்டு போறது செம டமாசு...இந்தப் பாட்டு அந்த படத்தோட அருமையான பாடலும் இல்லை. "ஆவாரம் பூ" பாட்டுக்கு தான் என்னோட ஓட்டு...இருந்தாலும் இந்த பாட்டைப் பத்தி எழுதணும்னு ஏதோ ஒரு எண்ணம்...அதான்..

ஓகே..வர்ட்டா!!!

Friday, December 19, 2008

அவனா நீ?

                                           
இது ஒரு விபத்து, விபரீதம் எப்படிச் சொல்வது? நாளை முதல் நான் எப்படி மத்தவங்களைப் பார்ப்பேன்?

என்ன வேலை செஞ்சிட்ட டா? என்று என் நண்பன் என்னை உலுக்கிய போது தான் நான் செய்த காரியத்தின் தீவிரம் கொஞ்சம் உரைத்தது எனக்கு.
ஒரு நாளுக்கு முன்னாடி நான் இதோ என் முன்னால இருக்கும் பல பேர்ல ஒருத்தனா ஒரு சாதரண மனுஷனாத்தான் இருந்தேன்?
ஏன் எனக்கு இந்த ஒரு நிலைமை? எல்லாத்துக்கும் காரணம் என்னோட அவசர புத்திதான்... இனி என்னோட வாழ்க்கை? ஹய்யோ அவசரத்துல இப்படி ஒரு வேலை செய்ய எப்படி முடிஞ்சது என்னால? 

நான் 26 வயதான middle class குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சராசரி ஆண்.ஒரு சராசரி ஆள்.என் வயதுள்ள பல பேரைப் போல் எனக்கும் நல்ல படிப்பு,நல்ல வேலை,அப்பா அம்மா சொல்லும் பெண்ணைத் திருமணம்,நல்ல வாழ்க்கை என்று சின்ன சின்ன ஆசைகள்(?!!!) தான் இருந்தது. அதில் பாதி கிணற்றைத் தாண்டினேன். மற்றவை என் வாழ்வில் நடப்பதற்குள் இதோ இது நடந்து விட்டது...
 
இன்று காலை எப்பவும் போல் நான் officeக்குக் கிளம்பினேன். கிட்டத் தட்ட 5000 பேர் பணிபுரியும் இடம் அது. ஆனால் அதில் எனக்கு ஸ்ரீராம் மட்டும் தான் ஒரே நண்பன். எனக்கு நடந்த இந்த விபரீதம் இன்று இதில் வேறு யாருக்காவது நடந்திருந்தால்? நினைக்கவே முடியலை...இந்த வேலைக்கு நான் தான் கிடைச்சேனா அந்த கடவுளுக்கு?

என்னுடன் வேலை செய்பவள் ஹேமா. அவளைப் பார்த்து goodmorning சொல்லி விட்டு நான் என்னுடைய cabinக்கு செல்ல முற்பட்டேன். அவள் என்னை இடை மறித்து "எனக்கு ஒரு சின்ன problem, lunch timeல கொஞ்சம் உன் கூட தனியா பேசணும்"என்றாள். நானும் சரி என்றேன். அதற்குப் பிறகு நான் அதைப் பத்தி மறந்தே போய்விட்டேன். ஒரு 2 மணி இருக்கும். coffee குடிக்கும்போது அவளைப் பார்த்தேன்.அப்போது தான் அவள் ஏதோ ப்ரச்சனை என்று சொன்னது ஞாபகம் வந்தது. அவள் கோபமாக இருந்தாள். நான் அவளிடம் போய்," Iam very sorry hema.ஏதோ வேலைல மறந்துட்டேன்" என்றேன் குற்ற உணர்வு மேலிட. அவள் இப்பவாவது பேசலாமா சார்?"என்றாள். நானும் "கண்டிப்பா" என்றேன்.

நாங்கள் ஒரு மூலையைத் தேர்ந்து எடுத்து அமர்ந்தோம். அப்போது தான் அந்த விபரீதம் நடந்தது.அந்த ஒரு கணம் இனி என்னோட வாழ்க்கையின் மொத்தத்தையும் மாற்றி அமைக்கப் போகிறது என்று எனக்கு அப்போ ஒரு சின்ன clue கூட இல்லை.

ஸ்ரீராம் என்னை மறுபடியும் நம்ப முடியாமல் பார்த்தான். "நீயா டா இப்படி? நீ ரொம்ப பயந்தவன் அப்படின்னு தான டா நான் நினைச்சேன்?எப்படி டா?இனிமேல அவ்வளவு தான்..உன்னோட வாழ்க்கையைப் பத்தி கொஞ்சமாவது யோசிச்சியாடா?என்றான்.
"என்ன என்னடா பண்ண சொல்ற?"என்று கத்தினேன். என்ன என்னடா பண்ண சொல்ற? நான் என்ன கொலையா பண்ணிட்டேன்?அவ என்னப் பார்த்து, என் கையைப் பிடிச்சிட்டு I LOVE YOU சொல்லுவான்னு எனக்கே தெரியாது டா. நானும் ஒரு சாதாரண மனுஷன் தானடா? அவள மாதிரி ஒரு பொண்ணு வந்து இப்படி சொல்லும்போது நான் எப்படி டா மறுக்க முடியும்?அதான் உடனே சரின்னு சொல்லிட்டேன்.அதுக்கு போய் ஏன்டா என்னை இப்படி கலாய்க்கற? எனக்கு என்றும் இல்லாத வெட்கம்.

இனிமேல என் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறப்போகுதோ?! ஆம்.இது ஒரு விபத்து தான் ஆனால் இனிய விபத்து.இனிமையான விபரீதம்.நாளை முதல் நான் எப்படி மத்தவங்களைப் பார்ப்பேன்?எல்லோரும் இவனப் போலவே கிண்டல் பண்ணித் தீர்த்துடுவாங்களே!!! ஆனா நல்ல வேளை இது என்னோட ஆபீஸ்ல வேற யாருக்கும் நடக்கல என்று மகிழ்ந்தேன்.என்னைத் தேர்ந்து எடுத்த கடவுளுக்கு கோடி நன்றி...
இதோ என்னுடைய cell phone சிணுங்குது. ஹேமாவாகத்தான் இருக்கும்.
நான் வர்ட்டா!!!

Wednesday, December 3, 2008

கண்ணைப் பற்றி அண்ணன்

இன்னிக்கு ஒரு சில கவிதைகள்.என்னோடது இல்ல. நான் கவிதை எழுதணும்னா யோசிக்கணும் எனக்கு. ஆனா இந்த ஜீவனுக்கு அந்த rules எல்லாம் கிடையாது.அவன் தான் என் அண்ணா.

என்னோட அண்ணா புதுக்கவிதை மரபுக்கவிதைன்னு எல்லாம் பாகுபடுத்தாம அருமையா கவிதை எழுதுவான்.
என்ன தோணுதோ அதை பிசரு இல்லாம எழுதறதுல அவன் கில்லாடி. ஒரு சின்ன sample.

நம் சமுதாயத்திற்கு புதுக்கவிதை புனையும் இளைஞர்கள் வேண்டாம்
நம் சமுதாயம் புதுக்க விதை போடும் இளைஞர்களே வேண்டும்

இது ஒரு 2 நிமிஷத்துல சொன்னது.

எனக்கு என் அண்ணா எழுதினதுல ரொம்ப favourite கிட்டத்தட்ட 10 இல்ல 12 வருஷத்துக்கு முன்னால அவன் எழுதின கண்ணைப் பத்தின கவிதைதான்.


கலர் கலராய்க் கோடி வண்ணங்கள் காட்டும் கண்ணின் நிறம்
கறுப்பு வெள்ளை

இன்னும் எனக்கு அது மறக்கவே இல்லை.

இந்த துளிகளைப் பல நேரங்களில் நான் கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்திருக்கிறேன். அவன் எழுத்துக்களுக்கு முதல் விசிறி நான்.




அடுத்த பதிவு ஒரு சின்ன கதை..

இப்ப நான் எஸ்!!!
வர்ட்டா!!!

Tuesday, November 4, 2008

இதுவும் இராமாயணம் தான்!!!

ஒரு சின்ன matter. யாரப் பத்தின்னு அப்பறம் பார்க்கலாம். நாங்க friends எல்லோரும் ஒரு sunday meet பண்ணோம். அப்போ ஒரு சின்ன skit பண்ணாலாம்னு முடிவு பண்ணிணாங்க. அங்க இருந்து தான் நம்ம கதை ஆரம்பிக்குது.

திரைக்குப் பின்னால்

எல்லோரும் ட்ரெஸ் செஞ்சி அழகா இருந்தாங்க. அரங்கேற்றத்துக்கு முன்னால் ஒரு foto session. அவங்க அவங்க சொந்தக்காரங்க மும்முரமா foto எடுத்துட்டு இருந்தாங்க. வசனம் மறந்தா சொல்லிக் கொடுக்க ஒரு prompter வேற இருந்தார். என்ன skitனு சொல்லவே இல்லையே!!! இராமாயணம் தான்.
முதல்ல ஒரு சின்ன intro ராமர் பிறப்பு,வனவாசம் பத்தி எல்லாம் சொல்ல அவர் இருந்தார். அப்பறம் நம்ம பிறவி நடிகர்களின் நடிப்பு ஆரம்பம். சீதாவுக்கு ராமர் உணவு தேடப் போவதுலர்ந்து சீதாவை அனுமார் உதவியோட மீட்பது வரை இந்தக் கதை இருக்கும்னு சொன்னாங்க. ஆமாம் பெரிய்ய்ய்ய்ய பகுதி தான் அப்படின்னு நாங்களும் நினைச்சோம். ஆனா ஒரு 5 நிமிஷத்துல எல்லாத்தையும் சொல்லி முடிச்சிடுவாங்கன்னு சொன்னாங்க.


திரையில்

Prompter கதையோட முன்னோட்டத்த ஒரு intro கொடுத்தார். அதுக்கு அப்பறம் ராமர்.சீதா,லக்ஷ்மணன் இவங்க மூணு பேரோட entryதான் முதல் காட்சி. ராமர் ஏதாவது உணவு கொண்டு வர்றேன்னு சொல்லி காட்டுக்குள்ள போறார்.
கொஞ்ச நேரம் காத்திருந்த சீதா லக்ஷ்மணனைப் பார்த்து ராமரைத் தேடிட்டு வரச் சொல்றாங்க. லக்ஷ்மணனும் முதல்ல போகாம இருந்துட்டு சீதா சத்தம் போட்டதும்,ஒரு கோடு கிழித்து விட்டு அதை சீதா தாண்டாமல் இருக்கணும்னு சொல்லிட்டு ராமரைத் தேடிப் போறார். அந்த நேரத்துல நம்ம villain ராவணனோட entry.
சீதாவ ராவணன் தூக்கிட்டுப் போவது,அனுமார் உதவி செய்வது, சீதா ராமருடன் சேர்வது,என்று படு வேகமாக முடிஞ்சது அந்த கதை. இதுல highlight என்னன்னா, ராவணன் சீதாவ தூக்கிட்டு போகும்போது ஏதோ காரணத்துனால அப்படியே freeze ஆகிட்டார். prompter பின்னால இருந்து "சீதாவக் கூட்டிட்டு போ" அப்படின்னு சொல்லிட்டே இருக்கார். ராவணன் நகரவே இல்லை. அந்த நேரத்துல சீதா கதை நகரணுமேன்னு ராவணன தர தரன்னு இழுத்துட்டுப் போனது சீதாவுக்கு சமயோசிதமா தோணிருக்கலாம். ஆனா கதையையே மாத்தறாங்கன்னு அவங்களுக்குப் புரியலை.
பார்த்த எங்களுக்கு பயங்கர சிரிப்பு. படிதாண்டாப் பத்தினி சீதா இப்படி ராவணன இழுத்துட்டு போறாளேன்னு ஒரே comments. அதப் பத்தி எல்லாம் கவலையே படலை அவங்க. கடைசி sceneல எல்லோரும் சேர்ந்து நிக்கும்போது சீதா ராமரை ஒரு பக்கமும் லக்ஷ்மணன ஒரு பக்கமும் பிடிச்சிட்டு நின்னாங்க. இதப் பார்த்து கூட நாங்க ரசிச்சிட்டு தான் இருந்தோம். இந்த காலத்து சீதான்னு தான் எல்லோரும் பேசிக்கிட்டோம்.
என்ன ஆச்சு சீதாக்கு அப்படின்னு நாங்க கேட்டப்போதான் தெரிஞ்சது சீதாவுக்கு ராமரா நடிச்சவர விட ரவணனா நடிச்சவரையும், லக்ஷ்மணனா நடிச்சவரையும் ரொம்பப் பிடிக்குமாம். இது இன்னும் soooperஆ இருந்தது.

ஆக மொத்தத்தில எங்களுக்கு அன்னிக்கு நல்ல சிரிப்பு மருந்து கிடச்சுது. BTW, இந்தக் கதை நாயக நாயகிகள் இயக்குனர் இவங்க எல்லாம் யாருன்னு சொல்லவே இல்லையே!!!


மூலக் கதை:
வால்மீகி,கம்பர்

திரைக்கதை
வசனம்
இயக்கம்
பெற்றோர்கள்


மொழி:
ஆங்கிலம்


நடிப்பு:
3ல் இருந்து 6 வயது பொடிப் பசங்க
(இப்ப புரியுதா நம்ம சீதா ஏன் அப்படி எல்லாம் நடந்துக்கிட்டாங்கன்னு?)

இதப் பத்தி விமர்சிக்கலாம்னு தான் இருந்தேன் வேற யாராவது நடிச்சிருந்தா..
ஆனா
குழந்தைகளை விமர்சிப்பது அழகில்லை
தெய்வத்தை விமர்சிப்பது முறையில்லை
குழந்தைகளே தெய்வமா வந்ததால விமர்சிக்க மனசில்லை...

இதோட கதை முடியலை. நான் சொல்ல வந்த,ஆச்சர்யப்பட்ட விஷயமே வேற. கிட்டத் தட்ட 7 குழந்தைங்கள வெச்சி(இதுல 5 குழந்தைங்களுக்கு 5 வயசுக்கும் குறைவு.2 பேருக்கு 6 இல்ல 7 வயசு) சும்மா உட்கார வெக்கறதே கஷ்டம். இவங்களுக்கு வசனம் எல்லாம் சொல்லித் தந்து அங்க கிட்டத் தட்ட 30 பேர் முன்னடி நடிக்க வெக்க நினைக்கிறாங்களேன்னு மனசுல சிரிச்சிட்டு காத்திருந்தேன். இப்போ எதுவும் முடிவு செய்ய வேண்டாம். performance எப்படி இருக்கும்னு பார்க்கலாம்னு காத்துட்டு இருந்தேன்.

குழந்தைங்களப் பார்த்துட்டு இருக்கறதே ஒரு visual treat. இதுல அவங்க வேஷம் எல்லாம் போட்டுட்டு திரைக்கு முன்னால நின்னா!!! எல்லோரும் கலக்கிட்டாங்க. அருமையான நடிப்பு. எங்களைப் பத்தி எல்லாம் கவலைப் படவே இல்ல அவங்க யாரும்.

அத விட ஆச்சர்யம் என்னன்னா எவ்வளவு பெரிய கதைய, சர்வ சாதாரணமா எவ்வளவு சின்னதா பசங்களுக்கும் ஆர்வம் குறையாத மாதிரியும் பார்கறவங்களுக்கும் அலுப்பு இல்லாத மாதிரியும் எல்லத்துக்கும் மேல எந்த ஒரு விஷயத்தையும் விடாம(ராமர் உணவு தேடிப் போறதிலேர்ந்து,லக்ஷ்மணன் சீதாவுக்குக் கோடு கிழிப்பது, ராவணன் உணவு கேட்டு வருவது,சீதாவைக் கவர்ந்து போவது,அனுமார் உதவியோடு சீதாவை மீட்பது அப்படின்னு கதைக்கு வேண்டிய ஒவ்வொரு முக்கியமான விஷயத்தையும்)சொல்லி இருந்தாங்க.என்ன திரைக் கதை?!!! எல்லா இயக்குனர்களும் line கட்டி நிக்கணும் இவங்க கிட்ட.!!! soooooper appu!!!


சும்மாவா சொன்னாரு திருவள்ளுவர் :
"குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைசொல் கேளா தவர் " அப்படின்னு .....

கண்ண மூடிட்டு யோசிச்சா இனிக்குது அந்த galatta.


சரி இப்போ நான்
அபீட்
வர்ட்டா!!!

Monday, October 27, 2008

முதல் தீபாவளி(லி)




ஆம்..இது என்னுடைய முதல் தீபாவளி தான். வேறு மண்ணில். நிச்சயமாக தாய் நாட்டுப் பற்று பற்றி எல்லாம் நான் பேசப்போவதில்லை.


oct 25th(சனிக்கிழமை) அன்று நாங்கள் எல்லோரும் பரபரப்பாக இயங்கினோம். அன்றுதான் எங்களுக்கு தீபாவளி. பல்வேறு இனிப்பு,சமையல்,வீட்டு அலங்காரம் என நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் ஓடிக் கொண்டு இருந்தோம். மாலை நண்பர்களை வீட்டிற்கு அழைத்து இருந்தோம். நாங்களும் நகை ,பட்டுப் புடவை ,குர்தா சகிதமாக எங்களை அலங்கரித்துக் கொண்டோம். ஒவ்வொருவராக வர, நாங்கள் வாழ்த்துக்களையும்,இனிப்புவகைகளையும் பரிமாறிக்கொண்டோம். மனைவி,மத்தாப்பு சகிதமாக கணவர்கள் குழந்தைகளையும் cameraவையும் கவனித்துக் கொண்டு இருந்தனர். அப்புறம் dinner. அதற்குப் பிறகு பாட்டுக்குப் பாட்டு என நன்றாகத் தான் முடிந்தது எங்கள் தீபாவலி. ஆனால் இத்தனை காலமாக நாங்கள் கொண்டாடி வந்த நாள் இப்படி இருக்காதே.!!!



இத்தனை வருடங்களாக ஒரு கொண்டாட்டத்தை ரசித்து விட்டு,அனுபவித்து விட்டு இன்று தீபாளியை தீபாவளியன்று கூட கொண்டாட முடியாமல் weekendல் கொண்டாடி முடித்து இருக்கிறோம். நிச்சயமாக குடும்பமாகத் தான் எல்லோரும் ஆர்ப்பரித்தோம்.
ஆனால் உண்மை என்னவென்றால்,

அந்த ஆரவாரத்தில் மனம் ஆழவில்லை
அந்த மகிழ்ச்சியில் ஒரு உயிர் இல்லை,
அந்த கொண்டாட்டத்தில் குதூகலம் இல்லை
ஆனாலும் நாங்கள் தீபாவலி கொண்டாடினோம்.



எங்களுக்குத் தான் இது புதுமையாக இருந்தது. பல வருடங்களாக இங்கு இருந்து வரும் என்னுடைய சில உறவினர்களைப் போல் இங்கு பலப் பல மக்கள். அவர்களுடைய முகத்தில் தான் எத்தனை சந்தோஷம்!!! உற்றுப் பார்த்தால் அவர்களிடம் ஒரு acceptance தெரிந்தது. இது தான் தங்களுடைய சந்தோஷம் என்று நன்றாக உணர்ந்த்திருந்தார்கள்.


அந்த கணம் ஒரு உண்மை என்னைச் சுட்டது.

ஒரு வேளை நாங்களும் நாளை இதே போல் மாறிவிடுவோமா? எல்லா சந்தோஷங்களுமே எங்களுக்கும் இப்படி ஒரு acceptanceன் விளைவாகத் தான் இருக்குமோ? ஆனால் அப்படியும் இல்லாவிட்டால் இங்கு எல்லாம் ஏது வேறு கதி?
அதனால் நாங்கள் தீபாவலி கொண்டாடினோம்.


மறுநாள்(ஞாயிறு-இன்று) மாலை(இந்தியாவில் திங்கள் காலை) எங்கள் phone செய்யும் வேலை ஆரம்பித்தது. பேசினோம்,பேசினோம்,பேசிக்கொண்டே இருந்தோம். எங்கள் உதட்டில் பேசப் பேச ஒரு புன்னகை. எங்கள் முகத்தில்
ஒரு பூரிப்பு. ஏதோ அவர்கள் எல்லோரும் எங்களைச் சுற்றியே இருப்பது போல் ஒரு மகிழ்ச்சி.


அன்று இனிப்பு இருந்தது, மக்கள் இருந்தார்கள், பட்டாசு இருந்தது, புத்தம் புது ஆடைகள் இருந்தன.ஆனாலும் என்னமோ missing. இத்தனை வருடங்களாக இவற்றில் எது இருந்தாலும், இல்லை என்றாலும் அந்த கொண்டாட்டத்தில் ஒரு உண்மை இருந்தது.


இன்று வந்த இந்த புன்னகையும்,பூரிப்பும் எங்கள் முகத்தில் அன்று இல்லை. அப்பொழுது தான் உறைத்தது எங்களுக்கு தீபாவளி இன்று தான் என்று.


அட!!! என்ன ஆச்சர்யம்! இவ்வளவு நேரம் தீபாவலியாக இருந்தது இப்பொழுது தீபாவளியாக தன்னால் மாறியது.


இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!


Saturday, October 25, 2008

Vanakkam makkale!

அனைவருக்கும் வணக்கம்!!!


இன்று முதல் நானும் ஒரு blogger.(பெருமையா சொல்லலைங்க! உங்க தலை எழுத்து இனிமேல நான் எழுதறதை எல்லாம் வேற நீங்க படிச்சு ஆகணும்...ANYWAY உங்களுக்கு ALL THE BEST...
வர்ட்டா!!!
அபீட்!